காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை- முதலமைச்சர் அறிவிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #EdappadiPalaniswami
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை- முதலமைச்சர் அறிவிப்பு
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com