அண்ணா சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகின்றனர்

அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். #EdappadiPalaniswami #Paneerselvam #AnnaBirthDay
அண்ணா சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகின்றனர்
Published on

சென்னை:

அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளையொட்டி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2018 முதல் 17.9.2018 வரை 3 நாட்கள், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நகரங்களிலும், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைத்து நிர்வாகிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்னேரியில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், காஞ்சீபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com