

திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதனால் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டும், திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடப்படுகிறது.
இன்று இரவு 1.40 மணி முதல் அதிகாலை 4.39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நிகழ்வதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக திருப்பதி கோவில் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் கோவிலை திறந்து சுத்தி, புண்ணியா வாசனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு அதன் பிறகே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பவுர்ணமி இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.