

சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருத்தணி தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், திருத்தணி தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உரிய முறையில் விண்ணப்பித்தால் அரசு ஆவணம் செய்யும் என்று தெரிவித்தார்.
அப்போது துணை கேள்வி எழுப்பிய எதிர் கட்சி துணை தலைவர் துரைமுருகன், குடியாத்தம் தொகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற போது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியை நெய்தது அத்தொகுதியை சேர்ந்த நெசவாளர்கள் என்று குறிப்பிட்டு, வரலாற்று சிறப்பு வாய்ந்த அத்தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து, அதற்கான பங்கீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஜவுளி கொள்கை மற்றும் விதியில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
பங்கீட்டு தொகையை நெசவாளர்கள் செலுத்தினால் அவர்கள் லாபம் பெறுவார்கள். ஜவுளி பூங்காவிற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.