விவசாய கடன் தள்ளுபடி கிடையாது - பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

விவசாய கடனை தள்ளுபடி செய்யும் எண்ணம் அரசுக்கு தற்போது கிடையாது என மத்திய விவசாய துறை இணை மந்திரி புருசோத்தம் ரூபாலா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
விவசாய கடன் தள்ளுபடி கிடையாது - பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நேற்று விவசாயிகள் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். உத்தரபிரதேசம், பஞ்சாப், மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் விவசாயிகளுக்கான கடனை இந்த ஆண்டு தள்ளுபடி செய்து உள்ளன. எனவே விவசாயிகளுக்கான கடனை மத்திய அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு மத்திய விவசாய துறை இணை மந்திரி புருசோத்தம் ரூபாலா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய கடனை தள்ளுபடி செய்யும் எண்ணம் அரசுக்கு தற்போது கிடையாது. அதற்கு பதிலாக விவசாயிகள் வாங்கும் கடனுக்கான வட்டியில் சலுகை அளிக்கப்படும். குறுகிய கால கடனாக 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி 4 சதவீதமாக குறைக்கப்படும். கடந்த 2003-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 48.6 சதவீத விவசாயிகள் கடன் சுமையில் இருந்தனர். 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பில் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.6,426 ஆக இருந்தது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com