

சிட்னி:
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது மெல்போர்ன். இந்த நகரின் பிளிண்டர்ஸ் சாலை பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சாலையை கடக்க நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், பாதசாரிகள் சிலர் தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கார் மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கார் மோதியதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் இதுபோல கூட்டமாக மக்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதால், இது அதுபோன்ற தாக்குதலாக இருக்குமோ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.