ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இடது கம்யூ. - மா.கம்யூ.கட்சிகளிடம் ஆதரவு கோரும் தி.மு.க.
சென்னை:
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பினை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. இந்த
தேர்தலில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும். பிற கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும்” என்றார்.
காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 5 கட்சிகள் ஏற்கனவே தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதற்கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பிற்பகல் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்குமாறு சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சி தலைமையிடம் கடிதம் அளிக்க உள்ளோம் என தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

