சொத்து வரி உயர்வை கண்டித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிதம்பரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #propertytaxhike
சொத்து வரி உயர்வை கண்டித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்
Published on

சிதம்பரம்:

நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், சிதம்பரம் நகராட்சி சீர் கேட்டை கண்டித்தும் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடலூர் கிழக்கு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் நகராட்சியை பொறுத்தவரை மக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சாலை, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் ஆகியவை சீர்கெட்டு உள்ளது.

மக்களுக்கு எந்தவித திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. இந்த அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜாபர்அலி, ஒன்றிய செயலாளர்கள் மனோகர், சபாநாயகம், வாக்கூர் முருகன், ராயர், சோழன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர துணை செயலாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார். #propertytaxhike

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com