

பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிய அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த நிலையில் கடந்த 23ம்தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் சென்றார். அங்கு அவர், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், டி.கே சிவக்குமார் இன்று பெங்களூர் வந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.