

ஓசூர்:
ஓசூர் ஜனனி கார்டன் பகுதியில் பாரத வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
இந்த மையத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை நேற்று வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்.
இதனை, ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள் கண்காணித்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியை சேர்ந்த குருமூர்த்திரெட்டி என்பவரது மகன் ரவி மோகன் (வயது31) என்பதும், டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ரவி மோகனை கைது செய்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை பறிமுதல் செய்தனர்.