search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாணவிகள் உருவாக்கிய மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கொடுக்கப்படுமா?
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாணவிகள் உருவாக்கிய மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கொடுக்கப்படுமா?

    • நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து தற்போது கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இருந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும் தற்போது பராமரிக்கப்படுவதில்லை.

    திருப்பூர்,

    தமிழகம் முழுவதும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மழை நீர் சேகரிப்பு முறை அனைத்து அரசு , தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அதற்கடுத்த ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.

    தற்சமயம் அரசு,தனியார் உள்ளிட்ட கட்டிடங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்படாமலும் , ஏற்கனவே ஏற்படுத்தப் பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமலும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை நீரை சேகரிக்கும் அமைப்புகள் புதிதாக நிறுவப்படாததாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து தற்போது கடும் சரிவை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் நகரில் அமைந்துள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உருவாக்கிய மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் மாதிரியை கொண்டு , கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து வீடுகள் , வர்த்தக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கினார் என்பதை நினைவு கூறுகின்றனர் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் .

    கடந்த 2000மாவது ஆண்டில் இப்பள்ளியில் பயின்ற 7 -ம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் தடுப்பணை ஒன்றை கட்டி அதில் பள்ளிக்கட்டிடங்களில் மழை காலத்தில் விழும் நீரினை தேக்கி , அருகில் உள்ள பள்ளிக்கிணற்றில் நீர் மட்டத்தை உயர்த்தினர் . இத்திட்டம் குறித்து அறிந்த அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் . உடனடியாக அந்த மாணவிகளையும் வழிகாட்டி ஆசிரியராக இருந்த ஈஸ்வரனையும் அழைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ,எம்ஜிஆர். அறக்கட்டளை சார்பாக 5000 ரூபாய் கொடுத்து பாராட்டினார்.மேலும் இந்த திட்டம் தேசிய அளவில் விருதுகளையும் பெற்றது .

    இதனைதொடர்ந்து, மாணவிகளின் திட்டத்தின் பயனை உணர்ந்து, தமிழக அரசு 2001 -ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்கனவே உள்ள அனைத்து குடியிருப்புகள் , தொழிற்சாலைகள் , அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பை காட்டாயமாக்கியதுடன் , புதிதாக கட்டப்படும் அனைத்து காட்டுமானங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டும் கட்டிட அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது .

    இதன் பின்னர் 2002 ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற,3 ஆம் குடிநீர் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவிகளின் இத்திட்டம் குறித்து பெருமையாக நினைவு கூர்ந்தார்.இது குறித்து முன்னாள் மாணவிகள் கூறும்போது, பள்ளி அளவில் செய்த மழைநீர் சேகரிப்பு முயற்சிக்கு தமிழகம் முழுவதும் முதல்வர் செயல்படுத்தி மிகப்பெரிய அங்கீகாரத்தை அன்றைய முதல்வர் எங்கள் பள்ளிக்கு கொடுத்தார். இத்திட்டம் பல்வேறு விருதுகளை பெற்றதுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்கள் குழுவுக்கு கொடுத்த பரிசுத் தொகையும் , பாராட்டும் இன்றும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளதாக குறிப்பிட்டனர் .

    அரசு பள்ளி மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தமிழகம் முழுவதும் அவரது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பயனுள்ள திட்டங்களில் ஒன்றாக மாற்றியது தங்களின் பள்ளிக்கு பெருமை என்றே அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் நினைவு கூர்ந்தனர் . அதே நேரத்தில் தற்போது போதிய அளவில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமையும் , புதிய கட்டுமானங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு செயல்படுத்தப்படுகிறதா குறித்து கண்காணிப்பும் இல்லை என்றே கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    ஏற்கனவே அரசு அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இருந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும் தற்போது பராமரிக்கப்படுவதில்லை என்பதையே காணமுடிகிறது .அவை உடைந்தும் தண்ணீர் தேங்கா வண்ணமும் உள்ளது. திருப்பூர் போன்ற மழை குறைவான வறட்சி மாவட்டங்களில் மழையின் தேவையை உணர்ந்தாவது இனி வரும் காலங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி , வான் கொடையான மழைநீரை சேமிப்பதே நம் வருங்காலத்துக்கு பயனாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    Next Story
    ×