search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம்

    • ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து தி.மு.க. அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார்.
    • எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அது தொடர்பான ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டிக்கப்பட்டதற்கு பா.ம.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த பிரச்சினை சட்டசபையில் இன்று விவாதமாக பேசப்பட்டது. பா.ம.க. சட்டமன்ற தலைவா் ஜி.கே.மணி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

    வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஆணையத்தின் பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க தேவையில்லை. ஒரு மாதம் நீட்டித்தால் போதும். இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.

    பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமலாக்கப்பட்ட 3 மாத காலத்தில் பதிலளித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆணையத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தி ருப்பதை ஏற்க முடியாது. இது வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிற செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.

    கால நீட்டிப்பு 6 மாதம் என்பதை ஒரு மாத காலமாக குறைக்கலாம் என்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது:-

    நேற்று இதே பிரச்சினை குறித்து ஜி.கே.மணி பேசினார். இது தொடர்பான துறையின் மானிய கோரிக்கை இன்று வருகிறது. அதில் பேசுங்கள் என்றோம். ஆனாலும் இந்த பிரச்சினையை இப்போது எழுப்பி உள்ளார். கலைஞர் இருந்தபோது 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தார் என்று பெருமையாக கூறினார்.

    இப்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு எந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது முறையான அமல்படுத்தப்படுமா? என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

    அதனால்தான் கோர்ட்டில் தடை வந்து விட்டது. அதையும் மீறி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.

    நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று பாராமல் உடனடியாக அமல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்றோம். அதற்கான ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து தி.மு.க. அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார்.

    உச்சநீதிமன்றம் தடை செய்தபோது சில வழிமுறைகளை தெரிவித்து உள்ளனர். அதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆணையத்தின் விருப்பத்தின்படிதான் இப்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் பேசினார். அவர் வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த இட ஒதுக்கீடு நன்மைகளை பட்டியலிட்டார்.

    சமூக நீதி அரசை தி.மு.க. வழி நடத்துவதாக கூறினார். அப்போது வன்னியர் சமூகமே தி.மு.க.வில் உள்ளது போன்ற கருத்தை தெரிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வேல்முருகன் பேசிய சில கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரினார்.

    அப்போது அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் குரல் எழுப்பினார்கள். இதனால் வாக்குவாதம் கடுமையானது.

    அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுந்து, இதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு நிகழ்ந்த துயரம் பற்றி குறிப்பிட்டார். அதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.

    உடனே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிறகு அமைதி ஏற்பட்டது. பின்னர் இட ஒதுக்கீடு தொடர்பாக உறுப்பினர்கள் பலர் பேசினார்கள். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.

    Next Story
    ×