என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு
    X

    வள்ளியூரில் வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. வினோத் மதுரையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கிருஷ்ண வேணியின் உறவினர் வீடு வள்ளியூர் அருகே உள்ள ஊத்தடி கிராமத்தில் உள்ளது. அங்கு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணவேணி அதனை பார்ப்பதற்காக பெருங்குடியில் இருந்து நேற்று தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

    தொடர்ந்து இரவில் கோவிலுக்கு சென்று கொடை பார்த்துவிட்டு வீட்டின் முதல் மாடியில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண வேணியின் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.

    தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்து தனது சங்கிலியை பிடித்துக்கொள்ள அதில் பாதி செயின் மர்ம நபரின் கையில் சிக்கியது.

    உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கிருஷ்ணவேணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து வீட்டின் முதல் தளத்தில் இருந்த பீரோவில் கிருஷ்ண வேனி சுமார் 12 பவுன் நகை வைத்திருந்துள்ளார். அதையும் மர்ம நபர் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ணவேணி வள்ளியூர் போலீசில் தனது 15 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாகவும், காற்றுக்காகவும் கிருஷ்ணவேணி வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். இதனை மர்ம நபர் அறிந்து நகையை பறித்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே அந்த பகுதியில் உள்ளி சி.சி.டி.வி. காமிராக்களை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×