உடுமலை அமராவதி அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
உடுமலை அமராவதி அணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.

அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com