

களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (வயது 47). நேற்று இவரும், இவரது மகள் சரண்யாவும் (27) அங்குள்ள பொது நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வ குமாரிக்கும் (44) தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரியின் மகன் நாகராஜன் (29) சரண்யா மீது மோட்டார்சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அமிர்த லெட்சுமி, சரண்யா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டவும் முயற்சி செய்துள்ளார். இதில் காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி மூலைக்கரைப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் செல்வகுமாரி, அவரது மகன் நாகராஜன் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜனை கைது செய்தனர். அவரது தாயார் செல்வகுமாரியை தேடி வருகின்றனர்.