search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க ஆதார் பணிகளில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படுமா?
    X

    கோப்புபடம்.

    பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க ஆதார் பணிகளில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படுமா?

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×