என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு அதிகரிப்பு - அரசு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
- பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
- அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
குடிமங்கலம் :
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கும், பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கு முன் பரவலாக எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சூரியகாந்தி சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி - பிப்ரவரி பயிரிடுவதற்கு ஏற்ற பருவமாகும்.வீரிய ரக விதைகளே இப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தாக்குதல் இச்சாகுபடியில், குறைந்தளவு இருந்தாலும் அறுவடை தருணத்தில், பறவைகளால் அதிக சேதம் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படுகிறது.
மகரந்த சேர்க்கை பாதிப்பு காரணமாக பூவில், விதைகள் பிடிக்காமல் பதராக மாறுவதும் சாகுபடியில், முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே முன்பு அயல் மகரந்த சேர்க்கைக்காக விளைநிலங்களில் தேனீ பெட்டி வைக்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சூரியகாந்தி சாகுபடியில் ஏக்கருக்கு குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகிறது. ஏக்கருக்கு, 700 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கிறது.அறுவடைக்கு முன் பூக்களை பறவைகளிடமிருந்து பாதுகாப்பது மிகுந்த சிரமம் அளிக்கிறது. காலை, மாலையில் காவல் இருந்தாலும் சேதம் அதிகம் ஏற்படுகிறது. மகசூல் பாதிக்கும் போது விலையும் இல்லாததால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.விற்பனை சந்தையும் இல்லாததும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.






