ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் தின விழா போட்டிகள் மாணவர்கள் பங்குபெற வனத்துறை அழைப்பு

உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

 உடுமலை:

உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகள் ஊடுமலை-பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.மாணவ- மாணவிகள் போக்குவரத்து வசதிக்கேற்ப இந்த மையங்களில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம்.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா கூறி இருப்பதாவது:-

ஓவியப்போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடக்கிறது. எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையில் நமது தேசிய விலங்கு புலி என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வனநிலப்பரப்பில் புலிகள் என்ற தலைப்பிலும், 6 - ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புலி மற்றும் அதன் இரைவிலங்குகள் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்பிலும் நடக்கிறது.

இதற்கான சாட் மற்றும் வண்ண உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். கட்டுரைப்போட்டி மதியம் 12:15 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். இந்த போட்டியானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புலிகள் ஏன் தேசிய விலங்கு என குறிப்பிடப்படுகிறது என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு வன நிலப்பரப்பில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார்-9487987173 உயிரியலாளர் மகேஷ்குமார்- 6369269722,9486192183, திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன்-9688414468 திருப்பூர் வனவர் முருகானந்தம்-9585563002 காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன்-7094639223.காங்கயம் வனக்காப்பாளர் செல்வராஜ் -8903428422) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர் மேலே உள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com