

நெல்லை:
புத்தகப்பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புத்தக திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தக திருவிழா நிகழ்ச்சி நிரல் அடங்கிய கையேட்டை கலெக்டர் விஷ்ணு வெளியிட அதனை எழுத்தாளரும், சாகித்ய விருதாளருமான வண்ண தாசன் பெற்றுக்கொண்டார்.
இதில் தேசிய தகவலியல் மைய இயக்குனர் ஆறுமுகநயினார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கிராம உதயம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் நடமாடும் நூலகத் தையும் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்தக திருவிழா நடைபெற்றது. தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது. கூடுதல் சிறப்பாக பொருநை நாகரீகத்தை வெளிப்படுத்தும் பேனர்கள் வைக்கப்படுகிறது.
புத்தக திருவிழாவில் கலைநிகழ்ச்சிகள், புகைப்பட போட்டி, புகைப்பட கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. புத்தக திருவிழா முழுக்க, முழுக்க மக்கள் கொண்டாட்டத்திற்கான திருவிழாவாகும்.
மாவட்டத்தில் உள்ள 49 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகளும், புத்தக திருவிழாவில் பார்வையிட வசதியாக மாவட்ட கல்வி அதிகாரி மூலம் சுழற்சி முறையில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்படுகிறது.
இதில் அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலும் காணி இன மக்கள் குறித்தும் அரங்குகள் இடம்பெறும். மேலும் பழைய புத்தகங்களை மாற்றி, புதிய புத்தகங்கள் வாங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காணிஇன மக்களுக்கு தேவையான திட்டகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விளக்கு வசதி கேட்டார்கள். இதற்காக சூரிய ஒளியில் மின்வசதி ஏற்படுத்தி கொடுக் கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.