

பூதலூர்:
பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடப்பு குறுவை பருவத்தில் தற்போது வரை பூதலூர் வட்டாரத்தில் 600 எக்டர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் மேலும் 600 எக்டர் நடவு எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை வரும் 24-ந் தேதி திறக்கப்படுவதால் குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய நெல் ரகங்களான சான்று பெற்ற டிபிஎஸ் 5.12500 கிலோ, ஏஎஸ்டி16 - 8500 கிலோ வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதை கிராம திட்டத்தின் கீழ் எஸ்டி 16 ரக நெல் விதை ஒரு விவசாயிக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற டிபிஎஸ் 5.50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான உயிர்உரங்கள் நெல் நுண்ணூட்டம் ஆகியவை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நெல்லை காலை வேளையில் இளம் சூட்டில் காயவைக்க வேண்டும். காயவைத்த நெல்லை கைப்பிடி அளவு எடுத்து முளைப்புத் திறன் பரிசோதனை செய்து உபயோகிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனால் தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். மேலும் நாற்றங்காலில் அதிக வெப்பத்தின் காரணமாக நீர்சூடாகி முளைப்புத் திறனை பாதிக்க வாய்ப்பு இருப்பதால் தண்ணீரை வடித்து மாலை நேரங்களில் விதைகளை விதைப்பது சிறந்த முறையாகும்.
எனவே விவசாயிகள் வயலினை கோடை உழவு செய்து தயார் நிலையில் வைக்கவும். முன்கூட்டியே நாற்றுக்களை தயார் நிலையில் வைத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.