

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும்
மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஜுன்மாதம் 14-ந்தேதி முடிய மொத்தம் 61 நாட்களுக்கு பாரம்பரிய மீன்பிடி
கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதித்திட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட 61 நாட்களுக்கு
மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சை மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் அல்லது இழுவலைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.