

சிவகிரி:
சிவகிரி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த குருவையா என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். தற்போது நெல் அறுவடை நடைபெறுவதால் வைக்கோல் வாங்கி வைத்திருந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.8000 ஆகும்.
வைக்கோல் படப்பில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன், சப் இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், கருப்பசாமி, தலையாரிகள் அழகுராஜா, வேல்முருகன் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர்.
ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியது. உடனடியாக வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான தீ தடுப்பு குழுவினர் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீயை அணைக்க தாமதம் ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு துறையினர் விரைவாக தீயை அணைத்ததால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.