search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
    X

    திண்டுக்கல்லில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

    • மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் :

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு மேல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.

    அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது.

    இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் தங்களது கைகளில் கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டனர். இதைத்தொடர்ந்து பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

    அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முகமது மீரான், கவுன்சிலர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×