search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    தஞ்சை மாவட்டத்தில் கிரெயின்ஸ் வலைத்தளத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

    • வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களைக் கொண்டு கிரெயின்ஸ்
    (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்த முடியும்.

    ஒற்றைசாரா வலை தளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.

    விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

    வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

    இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல், ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கொண்ட ஆவணங்களை சம்பந்த ப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×