

விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள ஓ. துரைசாமிபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 56). இவர் அங்குள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு நீர் திறந்து விடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முத்து வழக்கம் போல பணிக்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் அவர் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிறைந்து தண்ணீர் வெளியே சென்றது. இதனால் தண்ணீரை அடைப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்றபோது தொட்டியில் முத்து பிணமாக இறந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம், விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் முத்துவின் உடலை கயிறை கட்டி கீழே இறக்கினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முத்து எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.