search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக புகார்- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
    X

    நாமக்கல்லில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.பி.பி.பாஸ்கர் புதிதாக கட்டி உள்ள வீடு.

    ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக புகார்- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    • கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார்.
    • 2 முறை வெற்றி பெற்ற கே.பி.பி.பாஸ்கர் 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்தாக பட்டியல் தயாரித்து கவர்னரிடம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்கள் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    இதை தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்தினார். இப்பிரிவு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், வீரமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், தங்கமணி மற்றும் இவர்களின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சோதனை நடவடிக்கையில் அடுத்த கட்டமாக இன்று காலை முதல் நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கே.பி.பி.பாஸ்கர் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்து வந்தார். 2 முறை வெற்றி பெற்ற அவருக்கு 3-வது முறையாக கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவினார்.

    கே.பி.பி.பாஸ்கர் தனது மனைவி உமா மற்றும் குடும்பத்தினருடன் நாமக்கல் சந்தைபேட்டை புதூர் கொண்டிச்செட்டிபேட்டை ரோடு சப்-லேன் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது இவர் அ.தி.மு.க. நகர செயலாளராக உள்ளார்.

    இந்த நிலையில் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு பதவி காலத்தில் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

    விசாரணையில், பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் கே.பி.பி. பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என அவருக்கு தொடர்புடைய 24 இடங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டிச்செட்டி பேட்டை ரோட்டில் கே.பி.பி. பாஸ்கர் வசித்து வரும் பங்களா வீட்டிற்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 5.45 மணி அளவில் சென்றனர். அப்போது வீட்டின் வெளிப்பக்க பிரதான நுழைவு கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

    அப்போது வீட்டில் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். இதனால் மெயின் கேட்டை திறக்குமாறு போலீசார் கூறினர். சத்தம் கேட்டு பாஸ்கர் எழுந்து வந்து கதவை திறந்தார். அவரிடம், நாங்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து வந்து இருக்கிறோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, பாஸ்கர் தனது வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    தொடர்ந்து, போலீசார் வீட்டின் முன்பக்கம் உள்ள மெயின் கேட்டை பூட்டினர். பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இந்த சோதனை முடியும் வரை நீங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் தனித்தனி குழுவாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், வீட்டிற்குள் சோதனை நடத்தி வருகிறார்கள். பூஜை அறை, ஹால், சமையல் அறை, வி.ஐ.பி.களுடன் ஆலோசனை நடத்தும் அறை, வீட்டின் மேல்தளம், படுக்கை அறை போன்றவற்றில் பணம், நகை, மற்றும் சொத்து ஆவணங்கள் உள்பட இதர ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினார்கள். இதில் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களுடைய மதிப்பு ஆவணங்கள் கேட்டனர்.

    தொடர்ந்து குடிநீர் தொட்டி, மொட்டைமாடி, புத்தகம் வைத்திருக்கும் அலமாரி, பீரோ, மெத்தை, கட்டிலில் உள்ள அறை, பாத்திரங்கள், சமையல் பொருட்கள் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

    இந்த சோதனையின்போது பாதுகாப்புகாக வீட்டின் முன்பு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இது பற்றி தகவல் கிடைத்த அ.தி.மு.கவினர். அங்கு கூடினர். பாஸ்கர் வீட்டின் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ஏற்கனவே நாமக்கல்லில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சென்னை அருகே பனையூரில் உள்ள பங்களா, பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்கள், அவரது ஆடிட்டர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதன்தொடர்ச்சியாக முதன் முறையாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×