search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    X

    தூத்துக்குடி மக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    • துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
    • துப்பாக்கி சூட்டில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் நிலை உயிரிழந்தவர்களை விட கொடுமையானது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். துப்பாக்கி சூட்டில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் நிலை உயிரிழந்தவர்களை விட கொடுமையானது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் மக்கள் நியாயமாக போராடிய போது, திட்டமிட்டு மறைந்து இருந்தும், துரத்தி சென்றும் மக்களை சுட்டுக்கொன்றது தெளிவாக தெரியவந்துள்ளது.

    இந்த படுகொலையை நிகழ்த்திய போலீஸ் துறை அதிகாரிகள் குறித்தும், துணை நின்ற அரசு அதிகாரிகள் குறித்தும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை என்ற பெயரில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்காமல், முழுமையாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்சபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறிக்கையில் கூறப்பட்டு உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும், சி.பி.ஐ. விசாரணையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கண்டித்துள்ளது.

    இதனால் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×