தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க புதிய சட்ட முன்வடிவு

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 47707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூவம் நதி
கூவம் நதி
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த புள்ளி விபரங்கள் தாலுகா வாரியாக 'தமிழ் நிலம்' என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில்  தயாரித்து, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக இறையன்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 47707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் 4762 அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.

நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத காலம் அவகாசம் தேவைப்படும். குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து  நீர்நிலைகளையும் அந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வடிவை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com