முருகனுக்கு 6 நாள் விடுப்பு கேட்டு நளினியின் தாயார் மேல்முறையீட்டு மனு

முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார்.
முருகனுக்கு 6 நாள் விடுப்பு கேட்டு நளினியின் தாயார் மேல்முறையீட்டு மனு
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க கோரி அவரது மனைவி நளினியும், மாமியார் பத்மாவும் சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு கடந்த மாதம் 28-ம் தேதி நிராகரித்திருந்தார். முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் விடுப்பு வழங்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு பல் தொடர்பாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனக்கு வயது மூப்பு காரணமாக நளியை பராமரிக்க முடியவில்லை. முருகன் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் வந்தது இல்லை. மேலும் முருகன் மீது எந்த வழக்கும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இல்லை.

ஆகவே சிறைக் கண்காணிப்பாளர் கடந்த மாதம் 28-ம் தேதி தனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து தனது மகளின் கணவரான முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com