search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந்தேதி திறந்து வைக்கிறார்

    • மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ளது கீழடி கிராமம். கடந்த 5 ஆண்டுகள் முன்பு தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. தி.மு.க. ஆட்சியில் இந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் விரிவுபடுத்தப்பட்டது.

    இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், இரும்பு துண்டு உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. அப்போதைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறை கிணறு, சுடுமண், செங்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூர் போன்ற வைகை ஆற்று கரை பகுதியிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன.

    இதில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், பண்டைய தமிழர்களின் வாழ்வில் முறைகளை தற்போது நம் தலைமுறையினர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசு சார்பில் கீழடியில் சுமார் ரூ.11 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான அகழ்வாராய்ச்சி வைப்பக கட்டிடம் செட்டிநாடு கட்டிட கலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தில் உள்ள கோவிலில் உள்ள கல்மண்டபங்கள் போல் இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மர வேலைபாடுகள், குளம், கல் இருக்கைகள், பசுமையுடன் புல்தரைகள், அழகு செடிகள், சிறு மரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் எளிதாக பார்வையிடுவதற்கு லிப்ட் வசதி, அழகிய வடிவைப்பில் மரபடிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி கட்டிடங்களில் காட்சிபடுத்தப்படும் பொருட்களான மண்பாண்ட குடுவைகள், முதுமக்கள் தாழி, ஓடுகள், அணிகலன்கள், இதுதவிர சுவரில் வண்ண ஓவியங்கள், தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அறைக்கும் எளிதில் வந்துசெல்லும் வகையில் வழிகள், குளிர்ச்சி தரும் செட்டிநாடு ஆத்தங்குடி தரைகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, தீ தடுக்கும் சென்சார் கருவி, அலாரம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கீழடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் நாளை (3-ந்தேதி) நிறைவு பெறுகிறது.

    வருகிற 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் பஸ் வசதியே இல்லாமல் இருந்தது. தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி பணியால் இப்பகுதியில் கிராமங்களில் பஸ் வசதி, சாலை மற்றும் குடிநீர் வசதி, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பண்டைய தமிழர்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்ததை பெருமையாக கருதுகின்றனர். கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×