search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர்களின் தலையீடு இருக்கக்கூடாது- தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கணவர்களின் தலையீடு இருக்கக்கூடாது- தி.மு.க. கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்

    • அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன.
    • கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 153 பேர் உள்ளனர். இவர்களில் சில கவுன்சிலர்கள் தான் சிறப்பாக செயல்படுகின்றனர்.

    ஒரு சில கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சினைகளில் சரிவர பணியாற்றவில்லை என்று கட்சியின் மேலிடத்துக்கு புகார்கள் சென்றன.

    இதன் அடிப்படையில் தி.மு.க. மேலிடம் இன்று 98 கவுன்சிலர்களை அண்ணா அறிவாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கே தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். 15-க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்களும் வந்திருந்தனர். மேயர், துணை மேயரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

    அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன. கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, கட்சியின் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

    கவுன்சிலர்கள் மத்தியில் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டு வருகிறார். அவர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வருகிறது.


    கவுன்சிலர்களும் சிலர் வார்டு பக்கம் முழுமையாக சென்று பணிகளை கவனிப்பதில்லை.

    இவ்வாறு கூறிவிட்டு நடைமுறையில் உள்ள சில குறைபாடுகளை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டி பேசினார்.

    மழை காலம் வருவதால் கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை வைத்து கொண்டு அந்த பகுதி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

    சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு உள்ளது பற்றியும் விசாரித்தார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். புகார்களுக்கு ஆளாக கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

    பெண் கவுன்சிலர்களின் கணவர்களையும் அழைத்து உங்கள் தலையீடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும் சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வந்திருந்ததால் அந்த கவுன்சிலர்களிடமும் தனியாக விசாரணை நடத்தி அறிவுரை கூறினார்.

    அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×