search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலத்தை பாராளுமன்ற தேர்தல் நிர்ணயிக்கும்- மைத்ரேயன்
    X

    ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலத்தை பாராளுமன்ற தேர்தல் நிர்ணயிக்கும்- மைத்ரேயன்

    • மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    • பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தவர். 1991-ல் பா.ஜனதாவில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2000-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதை தொடர்ந்து 2002 முதல் 2019 வரை டெலலி மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டார்.

    இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். அவர் பா.ஜனதாவில் இணைந்தது ஏன் என்பது பற்றி கூறியதாவது:-

    மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    தமிழகத்தில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நானும் பா.ஜனதா பட்டாளத்தில் ஒருவராக இணைந்து செயலாற்ற உள்ளேன்.

    ஒரு கட்சியில் இருந்து விலகிய பிறகு அந்த கட்சியை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 2 வருடமாக எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதனாலேயே விலகினேன்.

    கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தல் நிர்ணயிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கட்சி அலுவலகத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    Next Story
    ×