search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே தந்தையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர்
    X

    கொலை செய்யப்பட்ட தசரதன்- கைதான அஸ்வத் குமார்

    கயத்தாறு அருகே தந்தையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர்

    • நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
    • அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 50) விவசாயி.

    இவரது மகன் அஸ்வத் குமார் (30) பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா. கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அருணா கீழகூட்டுப்பண்ணை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    அஸ்வத் குமார் கடந்த சில நாட்களாகவே தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும், இதுதொடர்பாக அவருக்கும், அவரது மாமனார் நாராயணசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இது தொடர்பாக ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் இன்று காலை அரிவாளுடன் மாமனார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது தந்தை தசரதன் அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுபற்றி தனது சம்பந்தி நாராயணசாமியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாராயணசாமி வீட்டில் அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அரிவாளுடன் அங்கு சென்ற அஸ்வத் குமார் வீட்டு கதவை அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.

    இந்நிலையில் மகனை சமாதானப்படுத்துவதற்காக அங்கு சென்ற தசரதன், அஸ்வத் குமாரை கண்டித்து அவரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் தந்தை என்றும் பாராமல் தசரதனை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து ஓடிய போது அவரை அஸ்வத் குமார் மீண்டும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தசரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று தசரதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை வழியிலேயே தடுத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×