

சென்னை:
ஜெயலலிதா நினைவுநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கார் மீது செருப்பு வீசி தாக்க முயன்றதாக அ.தி.மு.க. பிரமுகர் மாறன் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தார்.
டி.டி.வி. தினகரன் தூண்டுதலின்பேரில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களைக்காட்டியும், செருப்பை வீசியும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மாறன் தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் 294(பி), 148, 323, 506 (2) ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அதில் கட்சியினர் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மெரினாவில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வீடியோவை போட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன் முடிவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.