search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு கட்டி தருவதாக ரூ.1½ கோடி மோசடி: கைதான பா.ஜ.க. பிரமுகர் மேலும் பலரிடம் கைவரிசை
    X
    கைது செய்யப்பட்ட சுரேந்திரன்

    வீடு கட்டி தருவதாக ரூ.1½ கோடி மோசடி: கைதான பா.ஜ.க. பிரமுகர் மேலும் பலரிடம் கைவரிசை

    • கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர்.
    • தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

    சேலம்:

    சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (வயது 52). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டை கட்டிக் கொடுக்க, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் (33) என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி வீடு கட்டுவதற்காக ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கதிர்ராஜ் கொடுத்தார்.

    இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுரேந்திரன், புதிதாக வீடு கட்டி கொடுக்காமல் நிலவரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக்கொண்டார். இதையடுத்து தனது பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கதிர்ராஜ் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சுரேந்திரன் அவரது மனைவி தீபா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதால் இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கடந்த மாதம் 14-ந் தேதி கதிர்ராஜிடம் வீடு கட்டி தருவதாக ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக சுரேந்திரன், தீபா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி இளமுருகன், எஸ்.ஐ சந்திரன் தலைமையிலான போலீசார் சுரேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது மனைவி தீபாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர். தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×