அமைச்சர் கார் மீது காலணி வீசியது தவறு- அண்ணாமலை

இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்துவேன்.
அமைச்சர் கார் மீது காலணி வீசியது தவறு- அண்ணாமலை
Published on

ராமேசுவரம்:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று ராமேசுவரத்தில் மீனவர்களுடன் படகில் சென்று சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்கவும், இலங்கை கடற்படை சேதப்படுத்திய படகுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் மத்திய இணை மந்திரி முருகன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் விரும்பதகாத செயல். நான் வருவதற்கு முன்பே இந்த சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. இந்த சம்பவத்துக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பா.ஜனதா கட்சியை விட்டு சென்றது அவரது விருப்பம். கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிலர் அப்பாவிகள். அவர்கள் மீது வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com