search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் கொள்ளை- பெண் உள்பட 3 பேர் கைது
    X

    தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் கொள்ளை- பெண் உள்பட 3 பேர் கைது

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (வயது 61). மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

    இவர் கடந்த 21-ந் தேதி மனைவி லட்சுமியுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றார். இவரது மகன் புவனேஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு தொழில் சம்மந்தமாக புனேவுக்கு புறப்பட்டு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் குமார் சுப்பிரமணியன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

    கொள்ளையர்களை பிடிக்க கோயம்பேடு துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் கைவரிசை காட்டி கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    நகைகளை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உலகநாதன், சிவ விநாயகம் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது.

    மேலும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்கிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×