

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.
இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவ- மாணவிகள் வருகிற 22-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும், தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.