search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இருந்து கிருஷ்ணாபுரத்துக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர மாணவ- மாணவிகள் மனு
    X

    பஸ் வசதி கேட்டு மனு அளிக்க வந்த மாணவ- மாணவிகள்.

    நெல்லையில் இருந்து கிருஷ்ணாபுரத்துக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர மாணவ- மாணவிகள் மனு

    • சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
    • ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    நெல்லை:

    பாளை யூனியனுக்குட்பட்ட நொச்சிகுளம் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இன்று சீருடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் இருந்து காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் ஏராளமான மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறோம். வழக்கமாக 3 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு பஸ் சமீபகாலமாக அவ்வப்போது வராமல் நின்று விடுகிறது.

    சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    குறித்த நேரத்திற்கு பஸ்கள் வராததால் ஒழுங்கான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் படிப்பு தடைபடுகிறது. கடந்த 11-ந் தேதி பஸ் டிரைவர், மாணவி ஒருவரை அவதூறாக பேசி உள்ளார். அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சமத்துவபுரத்தில் இருந்து ஐகிரவுண்டு வழியாகவும், நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்தும் எங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதிகள் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    தென்னக ரெயில்வே யின் குட்ஷெட்டில் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் அய்யப்பன், மாரியப்பன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். எங்கள் சங்கத்தில் 120 தொழிலாளர்கள் உள்ளனர். எங்களை வழிநடத்த 2 காண்டிராக்டர்கள், 2 ஏஜெண்டுகள் உள்ளனர்.

    2 வருடத்திற்கு ஒருமுறை எங்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். தற்போதுள்ள ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு டிசம்பர் வரை நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில் ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    எனவே அங்கு வேலையில் எங்களுக்கு முன்னுரிமை அளித்து எங்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    மேலப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திற னாளிகளான காஜா மைதீன், அப்துல் காதர், பாத்திமுத்து ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் 3 பேரும் கடந்த பல வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.

    மாற்றுத் திறனாளி களான எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி இருந்தனர்.

    இவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதியின் செயற்குழு உறுப்பினர் காதர் மீரான் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    Next Story
    ×