

சிவகங்கை
குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை வேலுநாச்சியார் சிலை அருகே அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் இடம் பெற்ற கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மற்றும் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள வேலுநாச்சியார் சிலை அருகில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.