அம்பை அருகே இன்று காலை அரசு பஸ்சை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள்

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை அருகே இன்று காலை அரசு பஸ்சை சிறைபிடித்த பள்ளி மாணவர்கள்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com