

அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டிகேட் அடுத்த மூணாங்கரடு மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 25). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் , அதே தெருவில் வசித்து வரும் சதீஷ் (32), வரதராஜன் (54), கார்த்திக் (30) ஆகிய 3 பேருக்கும் ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் தாமரைச்செல்வனின் வயிற்றுப்பகுதியில் திடீரென குத்தினார்.
இதைத்தொடர்ந்து தாமரைச்செல்வன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் சதீஷ், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வரதராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.