

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வஞ்சி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அடுக்குமாடி குடியிருப்பு வழியாக 40 அடி வழித்தடம் விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதை குடிசைமாற்று வாரியம் அடைத்து கம்பிவேலி போடுவதால் பல கிலோ மீட்டர் சுற்றி வஞ்சிநகர் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பொதுமக்கள் செல்ல ஒதுக்கப்பட்ட சாலையை ஆக்கிரமிக்கும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.
இதனை கண்டித்து வஞ்சிநகர் பகுதி பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.