search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு: பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்திய பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் கைது
    X

    கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு: பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்திய பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் கைது

    • விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×