search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறைக்குப்பின் இன்று திறப்பு - பள்ளிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவ-மாணவிகள்

    • கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
    • தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

    பள்ளிகள் சுத்தம்

    அதன்பின்னர் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைக்கும், வருகிற 14-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் வர்ணம் பூசப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு விட்டது. இதேபோல் மாவட்டங்களில் சிறிய பழுதடைந்த பள்ளிகளும் பழுது பார்க்கப்பட்டது.

    பூங்கொத்துடன் வரவேற்பு

    நெல்லை மாவட்டத்தில் முதல் நாளான இன்று பள்ளிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்ததால் பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    டவுன் கல்லணை பெண்கள் பள்ளியில் மேயர் சரவணன் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பேட்டை ராணி அண்ணா மகளிர் பள்ளியில் மாணவி களுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்றார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதிலும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சீருடை அணிந்து உற்சாகமாக வந்த மாணவர்கள் காலையில் இறை வணக்கத்துடன் தங்களது படிப்பை தொடங்கினர்.

    முதல் நாளிலேயே பாடங்களை நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவால் மாணவர்களின் விடுமுறை காலம் குறித்து ஆசிரியர்கள் கேட்டறிந்தனர். அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாளிலேயே அனை வருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டு விட்டன.

    போக்குவரத்து அதிகரிப்பு

    பள்ளிகள் திறப்பையொட்டி இன்று காலையிலேயே மாநகர பகுதிகளில் அதிக அளவு ஆட்டோக்கள், பள்ளி பஸ், வேன்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. அவர்களை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லெட் கொடுத்து வரவேற்றனர்.

    அதே நேரத்தில் முதல் நாள் என்பதால் பெரும்பாலானோர் குழந்தைகளை பள்ளிக்கு தங்களுடனே அழைத்து சென்று கொண்டு விட்டனர். மாணவர்கள் விடுமுறை நாட்களில் எங்ககெல்லாம் சுற்றுலா சென்றார்கள்?, பொழுதை பயனுள்ளதாக கழித்தார்களா? என்பது பற்றி ஆசிரியர்கள் கலந்துரையாடினர். மேலும் ஒருசில பள்ளி ஆசிரியர்கள் அறிவு சார்ந்த நீதிக்கதைகளை மாணவர்களுக்கு கூறினர்.

    Next Story
    ×