search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச்சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்: தமிழக அரசு உத்தரவு
    X

    சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச்சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்: தமிழக அரசு உத்தரவு

    • 25.5.2013 அன்று தனது 91-ம் வயதில் மரணம் அடைந்தார்.
    • 24-ந் தேதி (நாளை) அவரது 100-வது பிறந்தநாள்.

    சென்னை :

    தமிழகத்தில் திரைப்பட பின்னணிப்பாடகர்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் டி.எம்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனாகும். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்காக சினிமா பாடல்களைப்பாடியுள்ளார். அந்தந்த நடிகர்களின் குரலுக்கு ஏற்றபடி குரலை மாற்றி பாடல்களைப் பாடுவது அவரது சிறப்புத்திறமையாகும்.

    அவரது தமிழ் உச்சரிப்பும், பிசிறு தட்டாத குரல் வளமும் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றன. 10 ஆயிரம் சினிமா பாடல்களையும், 2,500 பக்திப்பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

    டி.எம்.சவுந்தரராஜன் 1922-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி பிறந்தார். அவர் 25.5.2013 அன்று தனது 91-ம் வயதில் மரணம் அடைந்தார். 24-ந் தேதி (நாளை) அவரது 100-வது பிறந்தநாள்.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவர் வசித்து வந்த வீடு அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார்.

    பரிந்துரையை பரிசீலித்து, மந்தைவெளி மேற்கு வட்டச்சாலையின் பெயரை டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×