மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் ஆய்வு

மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட சம்பா சாகுபடியில், 20 ஆயிரம் ஏக்கர் அறுவடை முடிந்த நிலையில், கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து கடுமையான சேதம் அடைந்தது.

இதையடுத்து முதல்வர் உத்தரவின்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்யும் வகையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருமருகல் பகுதிக்கு வந்தார்.

பின்னர் அவர் திருமருகல் அருகே ஆலத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பார்வைட்டார்.

அப்போது விவசாயிகள் பாதித்த நெற்பயிர்களை அமைச்சரிடம் காண்பித்து பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:-

தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு குழு அனுப்பி ஈரப்பதத்தை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீரில் நனைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஆவதால், இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தண்ணீர் வடியும் தன்மையை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரிடர் காலங்களில் தொடர்ந்து தமிழக அரசுக்கு நிதி கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

நாகை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து கீழ்வேளூர் அருகே உள்ள சாட்டியகுடி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநாவாஸ் எம்எல்ஏ, வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழுத்த லைவர் செங்குட்டுவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com