விமான பயணிகளிடம் நாளை முதல் `குரங்கம்மை' பரிசோதனை-மா.சுப்பிரமணியன்

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.
விமான பயணிகளிடம் நாளை முதல் `குரங்கம்மை' பரிசோதனை-மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை:

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் அதன்பேரில் தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

ஸ்கேனிங், ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

பயமுறுத்தும் இந்த தொற்று பரவிய விதம் விசித்திரமானது. 1958-ல் டென்மார்க் தலைநகராமான கோபன் ஹேகனில் உள்ள ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் எம்பாக்ஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

1970-ல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதல் முதலாக மனிதர்களிடம் இந்த வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.

சின்னம்மை, பெரியம்மை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த வைரஸ் பெரியம்மை குடும்பத்தை சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பது பற்றி ஆய்வு செய்ததில் எலி, அணில்களிடம் காணப்பட்ட இந்த வைரஸ் அவை மனிதர்களை பிராண்டு வது மற்றும் அவற்றை சமைத்து சாப்பிடுவது மூலம் பரவியது தெரியவந்தது.

தொற்று ஏற்பட்டு 5-ல் இருந்து 21 நாட்களில் இதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றுமோ அதே போல் தான் வரும்.

கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலியும் இருக்கும். அந்த கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உடையவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தாக்குதல் தீவிரமாக இருக்கும்.

நுரையீரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நோய் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் விந்து வழியாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலுமாக குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவலாம் என்கிறார்கள்.

கடந்த காலங்களில் இந்த நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைந்த சதவீதத்தில் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் காங்கோ நாட்டில் 18 ஆயிரத்து 245 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. அதில் 919 பேர் உயிரிழந்துள்ளார்கள். இறப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நாட்டுக்கு அருகில் இருக்கும் கென்யா, புருண்டி, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

குரங்கம்மை கண்டவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இடைவெளி, முகக்கவசம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com