search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

    • விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    • பாதிக்கப்பட்ட வயல்களை படம் எடுத்து அதிகாரிகளிடம் வழங்கலாம்

    நாகர்கோவில், அக்.19-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து புலவர் செல்லப்பா பேசுகையில், பழையாற்றை மீட்டெடுப்போம் என்று முயற்சி மேற்கொண்டுள்ள கலெக்டர் ஸ்ரீதருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது விவசாயிகள் அனைவரும் அதற்கு துணை இருப்போம் என்றார்.

    இதைத் தொடர்ந்து கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. பரசேரி. வில்லுக்குறி பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறார்கள். எனவே சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்திற்கு கீழுள்ள நெல்களை மட்டுமே வாங்குகிறார்கள். மற்ற நெற்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

    தற்போது குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் 17 சதவீதத்திற்கு குறைவாக நெல் வழங்க முடியாது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தோவாளை பகுதியில் ஏற்கனவே மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி இருந்த நிலையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு அந்த வயலை விளைய வைத்துள்ளனர். தற்பொழுது நெல்லை கொடுக்க சென்றால் அதிகாரிகள் நெற்களை வாங்காமல் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.

    காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நெல் விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன. சம்பா அரிசி ஒரிஜினல் நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவில்லை. 2 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்துள்ளேன். ஆனால் எனக்கு குறைவான மகசூலே கிடைத்தது. மற்ற ரக நெல்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒன்றரை மேனி முதல் 2 மேனி வரை கிடைத்துள்ளது.

    இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை விட்டு விட்டு வருகிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரவிளை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதால் மரச்சீனி மற்றும் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் மணல் மூடைகள்அடுக்கப்பட்டு இருந்தன. தற்பொழுது மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 17 சதவீதத்திற்கு மேல் உள்ள நெற்பயிர்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குமரி மாவட்டத்தில் எவ்வளவு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அல்லது வேளாண் துறை அதிகாரிகளிடம் வழங்கலாம்.

    தற்பொழுது 70 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளியாற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×