விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் மழையால் பாதித்த மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி-பருப்பு

ரேஷன் கடைகளும் மழை நீரில் மூழ்கி விட்டது. அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் மழையால் பாதித்த மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி-பருப்பு
Published on

சென்னை:

பெஞ்ஜல் புயல்-மழையால் வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. இந்த மழையால் பல்வேறு ஊர்களில் ரேஷன் கடைகளும் மழை நீரில் மூழ்கி விட்டது.

அந்த கடைகளில் இருந்த உணவு பொருட்களும் வீணாகி விட்டது. தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களில் முகாமிட்டு ரேஷன் பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து அரிசி, பருப்பு, துணிமணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைக்கும் சென்று இலவசமாக பொருட்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை மக்கள் பெற்றுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com